Monday, February 21, 2022

கறிவேப்பிலை காராத்தா என்கிற சுப்பாத்தாள்

கறிவேப்பிலை கார ஆத்தா என்ற சுப்பாத்தாள்

1997ல் ஒரு கடினமான சூழ்நிலையில் இரு மகன்களுடன் அம்மா வசித்து வந்த கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையம் வீட்டில் வாசம்.

பிறந்தது முதல் நகரத்து வாழ்க்கை என்றே பழகிப்போன தால் கிராமத்தனமான இந்த ஊர் கொஞ்சம் அன்னியமாகத் தான் தெரிந்தது.

கழிப்பறை எல்லாம் கிடையாது. காட்டுக்குத் தான் போக வேண்டும். பேருந்து நிலையம் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். சாதிக் கட்டுப் பாடுகள் நிறைய.

ஆண்களுக்கு வீட்டுக்கே வந்து முடிதிருத்தம் செய்து எண்ணை மாலிஷ் செய்து போக ஒருவர் உண்டு. 

இப்படியான ஊரில் சுப்பாத்தாள் என்கிற ஆத்தா வீட்டில் மட்டும் தான் போன் இருந்தது. ஒரு சில தவிர்க்க முடியாத நேரங்களில் அவரிடம் அனுமதி வாங்கி சில போன் கால்கள் செய்வேன். ஆணி அடித்த மாதிரி அருகிலேயே உட்கார்ந்து இருப்பார். மிக எரிச்சலாக இருக்கும்.

எத்தனை நிமிடம் பேசுகிறோமோ அத்தனை ரூபாய் வசூலிப்பார். எல்லோராலும் உருவகப் படுத்தப் பட்ட அதே உருவம்தான் என் மனதிலும் அவர் குறித்து.

அவர் மாடு வைத்து இருந்தார். அதை ஓட்டிக் கொண்டு அவரது சோளக்காட்டுககு தினமும் ஓட்டிப் போவார். காலையில் போனால் அந்தியடங்க வீடு திரும்புவார்.

அப்படி போகையில் மாடு மிதித்து பாதத்தில் காயம் ஏற்பட்டது. 

ஆத்தா பால் தயிர் எல்லாம் விலைக்கு கொடுக்கும். சனிக்கிழமைகளில் கறிவேப்பிலை ஒடித்து கொண்டு போய் வடவள்ளி சந்தையில் விற்கும். அதனால் இவை ஏதும் தேவைப் பட்டால் அம்மா என்னை போய் வாங்கி வரச் சொல்லுவார்கள். என் அம்மாவுக்கு இவரை பிடிக்கவே பிடிக்காது.

இப்படியாக ஒரு மாலை நேரத்தில் ஆத்தாவிடம் என்னவோ வாங்கப் போனபோது. தனது பாதத்தில் சிரமப் பட்டு என்னவோ பச்சிலை வைத்து கட்டிக் கொண்டிருந்தார்.

மனதுக்கு வலித்தது. தனியோரு மனுஷியாக அவ்வளவு பெரிய வீட்டில் தனிவாசம். அன்று முதல் நான் தினமும் காலை மாலை ஆஜராகி விடுவேன். சுடுதண்ணியில் காயத்தை கழுவி சுத்தம் செய்து ஆத்தா வைத்திருக்கும் பச்சிலை விழுதை வைத்து கட்டி விடுவேன்.

காயம் ஆற ஒன்றிரண்டு மாதம் ஆனது. கடைசி வரை நான் தான் தாதி அவருக்கு. இடையில் வேலை அமைந்து போய் வர ஆரம்பித்தேன். ஆயினும் மருத்துவம் நிற்கவில்லை.

ஆத்தா வீட்டு ரோஜா அழகாக இருக்கும். அதில் பூக்கும் அத்தனை பூக்களும் எனக்குத்தான். என்னிடம் கறாராக பைசா வாங்கி விடும். ஆனால் காசே கொடுத்தாலும் வேறு யாருக்கும் ஒற்றை பூ தராது.

கோவை நான் பிறந்து வளர்ந்த ஊர்தான் எனினும் குளிர் காலத்தில் மிகவும் படுத்தும். சளித் தொல்லை மற்றும் வீசிங்கால் அவதிப் படுவேன். அக்காலத்தில் எனக்கு வேண்டி மருந்துக் குழம்பு அல்லது கொள்ளு ரசம் என்று ஏதாவது அரை டம்ளர் கொண்டு வந்து தரும். "சீலாத்தாளுக்கு குடு" என்று சொல்லி விட்டுப் போகும் ஆத்தாவை என் அம்மா முரைப்பார்கள். (வீட்டில் என் பெயர் ஷீலா. என்னையும் கவுண்டச்சி போல சீலாத்தாள் என் அழைக்க வைத்தது அவரது அன்பு)

சில நேரங்களில் கேஸ் சிலிண்டர் வந்து விடும் பைசா இருக்காது. ஆத்தாவிடம் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன் பலமுறை. இதைப் பார்த்து ஊர்க்காரர்கள் மூக்கில் விரல் வைப்பர். அவர்களை பொறுத்து வரை இவர் எச்சில் கையால் காக்காய் கூட விரட்டாத கருமி.
 
குடும்ப வாழ்க்கை கடினமான நிலையை கடந்து கொண்டிருந்த நேரம் அது. ஒருநாள் மனதின் பாரம் தாங்காமல் ஆத்தாவிடம் அனைத்தையும் பகிர ஆத்தா அவ்வளவு தைரியம் சொன்னார். அந்த முதிர் வயதில் அவ்வளவு அட்வான்ஸ்டாக இருந்தார்.

தனது கணவர் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போனதாகவும் அக்காலத்தில் எவர் தயவுமினறி அவரது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினது என்று பல துயரங்களை பகிர்ந்து கொண்டபோது எங்கள் உறவு இறுக்கமானது. பெண்கள் குறித்து அவரது கண்ணோட்டம் விசாலமாக இருந்தது.

2000ல் நான் சென்னை வந்தேன். கோவை வீட்டுக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட இருபத்தி ஐந்து ஆயிரம் கொடுத்து உதவியது ஆத்தா தான். என்ன நம்பிக்கை என் மீது. அன்று பவுன் வெறும் ரெண்டாயிரத்தி ஐநூறு தான்.

2004ல் அவர் பேரனுக்கு ஸ்டான்லியில் மெடிகல் சீட் கிடைத்ததும் வார இறுதியில் எங்கள் வீட்டில் தான் தங்குவான்.

2010 வாக்கில் பல இன்னல்களை சந்தித்த அந்த ஆத்மா போய் சேர்ந்தது எனக்கு ரொம்ப பிறகுதான் தெரிந்தது.

என் ஆளுமையை வடிவமைத்த சில இன்ஃப்ளூயென்ஸர்களில் ஒருத்தி இந்த சுப்பாத்தாள்.❤️❤️

No comments: