Monday, February 21, 2022

சந்தேகம் என்கிற பெருநோய்

சந்தேகம்...

உறவுகளை அசால்டாக பிய்த்து எறிந்து விட்டு நம்மை கதற வைக்கும் ஓர் பெருநோய்.

சந்தேகம் என்று வந்து விட்டால் அங்கிருந்து அகன்று விடுதல் நல்லது. அய்யோ நான் அப்படி இல்லை இப்படி என்று நிரூபிக்க முயல்வது என்றால் அது தினசரி தொடர் என்பதை காலம் தெரிவிக்கும்.

எனக்கு பெண்களிடம் பழக உள்ளூர பயம் இன்று வரை. என்னவோ ஆண்கள் என்னிடம் பெண்கள் அளவுக்கு குரூரமாக நடந்து கொண்டது இல்லை.

நான் அசிங்கப் பட்டது அவமானப் பட்டது எல்லாமே நூற்றுக்கு நூறு சதவீதம் பெண்களால் தான்.
பெற்ற தாய் முதல் கூடப் பிறந்த சகோதரி அத்தை பாட்டி அடுத்த வீட்டுக் காரி என்று அனைத்து பெண்களாலும் தவறாகவே புரிந்து கொள்ளப் பட்ட நிலையில் சுப்பாத்தாள் என்ற எழுவது வயது கிழவி முப்பது வயதில் இருந்த எனக்கு தோழி ஆனார். பிறகான காலத்தில் என் மருமகள் என வெகுசிலர்.

இன்று யோசித்துப் பார்க்கையில் நான் சக பெண்களை எனது தைரியமான செயல்களால் மிரட்டி இருக்கிறேன் அந்த காலத்தில் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.

பால்ய பருவத்தில் நான் தனிமை விரும்பி. அந்த தனிமை நிறைய சிந்திக்க தூண்டியது. சரி தவறுகளை எடை போட துணிந்தது. எல்லோரும் சரி என்று சொன்ன பல விஷயங்கள் சரியல்ல என்று மனதுக்குப் பட்டது.

இருபாலர் பள்ளியில் படித்த என்னிடம் என் அம்மா பசங்க கூட பேசக் கூடாது என்று போட்ட நிபந்தனைகள் பத்தாம் பசலித் தனமாக தோன்றியது. பேசினால் என்னதான் ஆகும் என்ற கேள்விக்கு விடை சொல்லும் பெரிய மனது தாய் முதல் அனைத்து பெண்களுக்கும் இல்லை, அது எனது அடங்கா மாரித் தனமாகவே புரிந்து கொள்ள பட்டது.

இன்றைய பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என்பது இன்னமும் தெரியவில்லை. போக வேண்டிய தூரம் அதிகம்தான் ஆயினும் நாங்கள் எங்கள் முன்னோடி பெண்கள் எலலாம் கடந்து வந்த பாதை மிக மிகக் கடினமானதாக இருந்தது.

எவராவது சந்தேகப் பட்டால் மனதுக்கு தகுந்தபடி சிலமுறை மன்னிக்கலாம்.‌ சிலமுறை புரிய வைக்கலாம். ஆனால் அதையே வாழ்க்கை முழுவதும் செய்ய இயலாது. 

அனுபவத்தில் சொல்கிறேன், யாரையும் சந்தேகப் படுமுன் கொஞ்சம் நம்பிக்கை வைக்க முயற்சி செய்யுங்கள்.

என் அப்பாவுக்கு என் மேல் பெரும் நம்பிக்கை என்று நான் நம்பினேன். அதை வலிமைமிக்க ஒன்றாக்க மெனக் கெட்டேனே தவிர கெடுக்க சிறு முயற்சி கூட செய்தது இல்லை. அதன் பிறகு ராமச்சந்திரன் வாழ்க்கையில் கிடைத்த வரம். எவர் என்ன சொன்னாலும் அவருக்கு நம்பிக்கை மிகு தோழியாக அவரருகில் நான்.

உறவுகளை உரமாக்கும் மந்திரம் நம்பிக்கை. முயற்சித்து பார்க்கலாமே.

கறிவேப்பிலை காராத்தா என்கிற சுப்பாத்தாள்

கறிவேப்பிலை கார ஆத்தா என்ற சுப்பாத்தாள்

1997ல் ஒரு கடினமான சூழ்நிலையில் இரு மகன்களுடன் அம்மா வசித்து வந்த கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையம் வீட்டில் வாசம்.

பிறந்தது முதல் நகரத்து வாழ்க்கை என்றே பழகிப்போன தால் கிராமத்தனமான இந்த ஊர் கொஞ்சம் அன்னியமாகத் தான் தெரிந்தது.

கழிப்பறை எல்லாம் கிடையாது. காட்டுக்குத் தான் போக வேண்டும். பேருந்து நிலையம் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். சாதிக் கட்டுப் பாடுகள் நிறைய.

ஆண்களுக்கு வீட்டுக்கே வந்து முடிதிருத்தம் செய்து எண்ணை மாலிஷ் செய்து போக ஒருவர் உண்டு. 

இப்படியான ஊரில் சுப்பாத்தாள் என்கிற ஆத்தா வீட்டில் மட்டும் தான் போன் இருந்தது. ஒரு சில தவிர்க்க முடியாத நேரங்களில் அவரிடம் அனுமதி வாங்கி சில போன் கால்கள் செய்வேன். ஆணி அடித்த மாதிரி அருகிலேயே உட்கார்ந்து இருப்பார். மிக எரிச்சலாக இருக்கும்.

எத்தனை நிமிடம் பேசுகிறோமோ அத்தனை ரூபாய் வசூலிப்பார். எல்லோராலும் உருவகப் படுத்தப் பட்ட அதே உருவம்தான் என் மனதிலும் அவர் குறித்து.

அவர் மாடு வைத்து இருந்தார். அதை ஓட்டிக் கொண்டு அவரது சோளக்காட்டுககு தினமும் ஓட்டிப் போவார். காலையில் போனால் அந்தியடங்க வீடு திரும்புவார்.

அப்படி போகையில் மாடு மிதித்து பாதத்தில் காயம் ஏற்பட்டது. 

ஆத்தா பால் தயிர் எல்லாம் விலைக்கு கொடுக்கும். சனிக்கிழமைகளில் கறிவேப்பிலை ஒடித்து கொண்டு போய் வடவள்ளி சந்தையில் விற்கும். அதனால் இவை ஏதும் தேவைப் பட்டால் அம்மா என்னை போய் வாங்கி வரச் சொல்லுவார்கள். என் அம்மாவுக்கு இவரை பிடிக்கவே பிடிக்காது.

இப்படியாக ஒரு மாலை நேரத்தில் ஆத்தாவிடம் என்னவோ வாங்கப் போனபோது. தனது பாதத்தில் சிரமப் பட்டு என்னவோ பச்சிலை வைத்து கட்டிக் கொண்டிருந்தார்.

மனதுக்கு வலித்தது. தனியோரு மனுஷியாக அவ்வளவு பெரிய வீட்டில் தனிவாசம். அன்று முதல் நான் தினமும் காலை மாலை ஆஜராகி விடுவேன். சுடுதண்ணியில் காயத்தை கழுவி சுத்தம் செய்து ஆத்தா வைத்திருக்கும் பச்சிலை விழுதை வைத்து கட்டி விடுவேன்.

காயம் ஆற ஒன்றிரண்டு மாதம் ஆனது. கடைசி வரை நான் தான் தாதி அவருக்கு. இடையில் வேலை அமைந்து போய் வர ஆரம்பித்தேன். ஆயினும் மருத்துவம் நிற்கவில்லை.

ஆத்தா வீட்டு ரோஜா அழகாக இருக்கும். அதில் பூக்கும் அத்தனை பூக்களும் எனக்குத்தான். என்னிடம் கறாராக பைசா வாங்கி விடும். ஆனால் காசே கொடுத்தாலும் வேறு யாருக்கும் ஒற்றை பூ தராது.

கோவை நான் பிறந்து வளர்ந்த ஊர்தான் எனினும் குளிர் காலத்தில் மிகவும் படுத்தும். சளித் தொல்லை மற்றும் வீசிங்கால் அவதிப் படுவேன். அக்காலத்தில் எனக்கு வேண்டி மருந்துக் குழம்பு அல்லது கொள்ளு ரசம் என்று ஏதாவது அரை டம்ளர் கொண்டு வந்து தரும். "சீலாத்தாளுக்கு குடு" என்று சொல்லி விட்டுப் போகும் ஆத்தாவை என் அம்மா முரைப்பார்கள். (வீட்டில் என் பெயர் ஷீலா. என்னையும் கவுண்டச்சி போல சீலாத்தாள் என் அழைக்க வைத்தது அவரது அன்பு)

சில நேரங்களில் கேஸ் சிலிண்டர் வந்து விடும் பைசா இருக்காது. ஆத்தாவிடம் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன் பலமுறை. இதைப் பார்த்து ஊர்க்காரர்கள் மூக்கில் விரல் வைப்பர். அவர்களை பொறுத்து வரை இவர் எச்சில் கையால் காக்காய் கூட விரட்டாத கருமி.
 
குடும்ப வாழ்க்கை கடினமான நிலையை கடந்து கொண்டிருந்த நேரம் அது. ஒருநாள் மனதின் பாரம் தாங்காமல் ஆத்தாவிடம் அனைத்தையும் பகிர ஆத்தா அவ்வளவு தைரியம் சொன்னார். அந்த முதிர் வயதில் அவ்வளவு அட்வான்ஸ்டாக இருந்தார்.

தனது கணவர் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போனதாகவும் அக்காலத்தில் எவர் தயவுமினறி அவரது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினது என்று பல துயரங்களை பகிர்ந்து கொண்டபோது எங்கள் உறவு இறுக்கமானது. பெண்கள் குறித்து அவரது கண்ணோட்டம் விசாலமாக இருந்தது.

2000ல் நான் சென்னை வந்தேன். கோவை வீட்டுக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட இருபத்தி ஐந்து ஆயிரம் கொடுத்து உதவியது ஆத்தா தான். என்ன நம்பிக்கை என் மீது. அன்று பவுன் வெறும் ரெண்டாயிரத்தி ஐநூறு தான்.

2004ல் அவர் பேரனுக்கு ஸ்டான்லியில் மெடிகல் சீட் கிடைத்ததும் வார இறுதியில் எங்கள் வீட்டில் தான் தங்குவான்.

2010 வாக்கில் பல இன்னல்களை சந்தித்த அந்த ஆத்மா போய் சேர்ந்தது எனக்கு ரொம்ப பிறகுதான் தெரிந்தது.

என் ஆளுமையை வடிவமைத்த சில இன்ஃப்ளூயென்ஸர்களில் ஒருத்தி இந்த சுப்பாத்தாள்.❤️❤️

Monday, January 17, 2022

புத்தாண்டு 2022❤️

சிறு வயதிலே நான் ரொம்ப பேச மாட்டேன் (அட நம்புங்க) பத்து கேள்விகளுக்கு ரெண்டே பதில்தான் சொல்வேன். அடக்குமுறை தான் காரணம் என்றால் யார் கேட்பார்கள். மிலிட்டரி அம்மா காரணமாக நான் ரொம்ப பயந்தாங்குள்ளி. ஆனால் அம்மா கற்றுக் கொடுத்த மரியாதை கலந்த மொழி மற்றும் பண்பு அது மட்டும் இன்று வரையிலும் மாறவேயில்லை.

வாய் திறந்து பேசாத காரணமாக எந்த விஷயத்தையும் கூர்ந்து நோக்கும் அறிவு கைவரப் பெற்றது. சிறு சிறு விஷயங்கள் கூட அறிவில் புலப்படும். எல்லோருக்கும் ஒரு பார்வை ஆனால் மாறுபட்ட கோணத்தில் நான் உணர்வது என் வயது கூடக் கூட சேர்ந்து வளர்ந்தது.

எதிரில் இருப்பவர்களின் முட்டாள்தனம் சுலபமாக தென்படும். ஆனால் அதை விமர்சனம் செய்ய தைரியம் துணிவு இருந்தது இலலை. ஒரு விதத்தில் கும்கி படத்தின் ராமையா மாதிரி அனைத்தும் மைன்ட் வாய்ஸ் தான் ‌

முப்பது வயது வந்து மூன்று பிள்ளைகள் பெற்ற பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வந்தது. அதன் காரணமாக குடும்பத்தில் அமைதி குலைந்தது. நான் சந்தித்த வரையில் தைரியமாக இருக்கும் பெண்ணை ஆண் விரும்புவதில்லை. 

வாழ்வின் முதல் முப்பது ஆண்டுகள் அப்படி கழிந்தது என்றால் அடுத்து வந்த காலம் அப்படியே தலைகீழ் மாற்றங்களுடன். அதிர்ந்து கூட பேசாத நான் அதிர அதிர பேச ஆரம்பித்தேன். தபபு தவறுகளை கண்டும் காணாமல் வாழ்ந்த நான் கண் முன்னே நிகழும் எந்த சிறு விஷயங்களுக்கும் ரியாக்ட் பண்ண ஆரம்பித்தேன். மென்மை மறந்து போன கண்டிப்பான குரல் வந்து விட்டது. மேலும் ரொம்ப ரூல்ஸ் பேசும் ஒருத்தி ஆகிப் போனேன்.

எந்த சிறு தவறுகளையும் எவரிடமும் மன்னிக்க தோணவில்லை. எவரையும் நம்ப விரும்புவதில்லை. ஒழுங்கற்ற எதையும் விரும்ப தோணவில்லை. கணவர் ராமச்சந்திரன் ரொம்பவும் சிரமப் பட்டார், இந்த குணாதிசயங்கள் கொண்ட ஒரு மனைவியுடன் வாழ.

அவரது அன்பு காரணமாக கொஞ்சம் மாறினேன் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் அடிப்படை குணமான ஒழுங்கற்ற எதையும் நிராகரிப்பு செய்வதையும் ஒன்றிரண்டு முறைக்கு மேல் எவரையும் மன்னிப்பதை விட அவர்களை விலக்கி விடுதல் நலம் என்கிற குணம் இன்னமும் மனதின் அடியில் விழித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இவைகள் நிறைய பொருளாதார இழப்பை கொடுத்து இருக்கின்றன. அது குறித்து பெரிய வருத்தம் என்றும் இருந்தது இலலை. ஆயினும் தனிமை விரும்பியான எனக்கு உறவின் இழப்புகள் பெரிதாக தெரியவில்லை. இந்த புத்தாண்டில் சில நட்புகளை கட்டம் கட்டி விரட்டி விட்டேன். நட்பின் பெயர் சொல்லி தலையில் ஏறி அமர்வது மற்றும் உபயோகித்து கொள்வது என்பது சுத்தமாக சரிப்பட்டு வராததால் வெட்டி எறிந்து தான் இந்த புத்தாண்டு துவங்கி இருக்கிறது.

இத்தனை ஆண்டுகளில் இது மூன்றாவது விட்டொழிப்பு. ஒவ்வோர் முறையும் கொஞ்ச நாள் வலி இருக்கும். ஆனால் அதனால் கிடைக்கும் விடுபட்ட உணர்வு சொல்லி மாளாது. 

புத்தாண்டு புத்துணர்வு...