உறவுகளை அசால்டாக பிய்த்து எறிந்து விட்டு நம்மை கதற வைக்கும் ஓர் பெருநோய்.
சந்தேகம் என்று வந்து விட்டால் அங்கிருந்து அகன்று விடுதல் நல்லது. அய்யோ நான் அப்படி இல்லை இப்படி என்று நிரூபிக்க முயல்வது என்றால் அது தினசரி தொடர் என்பதை காலம் தெரிவிக்கும்.
எனக்கு பெண்களிடம் பழக உள்ளூர பயம் இன்று வரை. என்னவோ ஆண்கள் என்னிடம் பெண்கள் அளவுக்கு குரூரமாக நடந்து கொண்டது இல்லை.
நான் அசிங்கப் பட்டது அவமானப் பட்டது எல்லாமே நூற்றுக்கு நூறு சதவீதம் பெண்களால் தான்.
பெற்ற தாய் முதல் கூடப் பிறந்த சகோதரி அத்தை பாட்டி அடுத்த வீட்டுக் காரி என்று அனைத்து பெண்களாலும் தவறாகவே புரிந்து கொள்ளப் பட்ட நிலையில் சுப்பாத்தாள் என்ற எழுவது வயது கிழவி முப்பது வயதில் இருந்த எனக்கு தோழி ஆனார். பிறகான காலத்தில் என் மருமகள் என வெகுசிலர்.
இன்று யோசித்துப் பார்க்கையில் நான் சக பெண்களை எனது தைரியமான செயல்களால் மிரட்டி இருக்கிறேன் அந்த காலத்தில் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.
பால்ய பருவத்தில் நான் தனிமை விரும்பி. அந்த தனிமை நிறைய சிந்திக்க தூண்டியது. சரி தவறுகளை எடை போட துணிந்தது. எல்லோரும் சரி என்று சொன்ன பல விஷயங்கள் சரியல்ல என்று மனதுக்குப் பட்டது.
இருபாலர் பள்ளியில் படித்த என்னிடம் என் அம்மா பசங்க கூட பேசக் கூடாது என்று போட்ட நிபந்தனைகள் பத்தாம் பசலித் தனமாக தோன்றியது. பேசினால் என்னதான் ஆகும் என்ற கேள்விக்கு விடை சொல்லும் பெரிய மனது தாய் முதல் அனைத்து பெண்களுக்கும் இல்லை, அது எனது அடங்கா மாரித் தனமாகவே புரிந்து கொள்ள பட்டது.
இன்றைய பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என்பது இன்னமும் தெரியவில்லை. போக வேண்டிய தூரம் அதிகம்தான் ஆயினும் நாங்கள் எங்கள் முன்னோடி பெண்கள் எலலாம் கடந்து வந்த பாதை மிக மிகக் கடினமானதாக இருந்தது.
எவராவது சந்தேகப் பட்டால் மனதுக்கு தகுந்தபடி சிலமுறை மன்னிக்கலாம். சிலமுறை புரிய வைக்கலாம். ஆனால் அதையே வாழ்க்கை முழுவதும் செய்ய இயலாது.
அனுபவத்தில் சொல்கிறேன், யாரையும் சந்தேகப் படுமுன் கொஞ்சம் நம்பிக்கை வைக்க முயற்சி செய்யுங்கள்.
என் அப்பாவுக்கு என் மேல் பெரும் நம்பிக்கை என்று நான் நம்பினேன். அதை வலிமைமிக்க ஒன்றாக்க மெனக் கெட்டேனே தவிர கெடுக்க சிறு முயற்சி கூட செய்தது இல்லை. அதன் பிறகு ராமச்சந்திரன் வாழ்க்கையில் கிடைத்த வரம். எவர் என்ன சொன்னாலும் அவருக்கு நம்பிக்கை மிகு தோழியாக அவரருகில் நான்.
உறவுகளை உரமாக்கும் மந்திரம் நம்பிக்கை. முயற்சித்து பார்க்கலாமே.